ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?
ஈரானை கடிதம் மூலம் மோஜ்தபா ஆள்வதாகக் கூறப்படும் நிலையில் அவர் எங்கே, எப்படி இருக்கிறார்? என்பது பற்றி..
அலி கமேலி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்ற மோஜ்தபா கமெனி, படுகாயங்களுடன் தலைமறைவான நிலையில், ஈரானை கடிதம் மூலம் ஆட்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தனது தந்தைக்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவராக பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் தோன்றாத மோஜ்தபா கமேனி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படையின் தாக்குதலில் படுகாயமடைந்து, முகம் சிதைந்து பேசக்கூட முடியாத நிலையில் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்தும், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்தும் சர்ச்சைகள் வலுவடைந்து வருகின்றன.
Advertisement
Advertisement
சில ஈரானிய அதிகாரிகள், மொஜ்தபா கமேனி குறைந்தபட்சம் இப்போதைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை புரட்சிகர காவலர்களின் இராணுவத்தில் உள்ள தளபதிகளுக்கு வழங்கியுள்ளார் என்று கூறியிருப்பதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி சுயநினைவை இழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் அறிக்கைகள் மூலம் ஈரானி ஆட்சி செய்து வருவதாகக் கூறப்படுவது, உண்மையில் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.
பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தார். அதில் அவரது ஒரு காலுக்கு மூன்று முறை அறுவைசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. பிறகு, ஒரு கையில் அறுவைசிகிச்சை நடந்து அது மெல்ல செயல்படத் தொடங்கியிருக்கிறது. அவரது முகம் மற்றும் உதடுகள் கடுமையாக சேதமடைந்து அவரால் பேச முடியாமல் இருப்பதாகவும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடக செய்தி தெரிவித்திருந்தது.
பாதுகாப்புக் கருதி, மோஜ்தபா கமேனியுடன் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தொடர்பு கொள்வதாகவும் அவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. ஈரான் அதிபர் மட்டுமே அவரைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோருடன் முக்கியத் தலைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பல நாள்கள் போர் தொடர்ந்த நிலையில் தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.