குருத்தணுக்கள் (ஸ்டெம்செல்கள்) மூலம் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் மருத்துவ சிகிச்சைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ராமவர்மா கூறினார்.
சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குருத்தணுக்கள் மருத்துவச் சிகிச்சையின் இன்றைய நிலை குறித்த சர்வதேசக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
60 ஆண்டுகளுக்கு முன் தசை, ரத்தம், மஜ்ஜை ஆகியவற்றின் குருத்தணுக்கள் மூலம் பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும் என்று கண்டறியப்பட்டது.
தொடர் ஆராய்ச்சி நடவடிக்கையின் விளைவாக வளர்ந்த நாடுகளான கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புற்றுநோய், இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண், குடல், கணையம் தொடர்பான நோய்களுக்கு குருத்தணுக்கள் மருத்துவச் சிகிச்சை முறை வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் குருத்தணுக்கள் மருத்துவச் சிகிச்சை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மருத்துவர்கள் தங்களது அறிவாற்றலை ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.