சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மாநகராட்சி ரத்த பரிசோதனை மைய வளாகத்தில் உள்ள டயாலிசிஸ் சிகிச்சை மையத்துக்கு தன்னார்வ அமைப்புகள் சார்பில் ரூ.24 லட்சத்தில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (டேங்கர் பவுண்டேஷன்), சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இந்த சிகிச்சை மையத்தை செயல்படுத்தி வருகின்றன.
இந்த டயாலிசிஸ் மையத்துக்கு 4 ஹீமோ டயாலிசிஸ் கருவிகளை யுனைடட் வே அமைப்பு, சீனிவாசா காந்தி நிலையம், சன் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்கியுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் புருஷோத்தமன், உறுப்பினர் நாராயணன், டேங்கர் அறக்கட்டளை அறங்காவலர் லதா ஏ.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு புதிய கருவிகளின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மிகவும் அவசியமாகும். தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை செலவாகிறது. மாநகராட்சியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. தற்போது தினமும் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் கருவிகள் பெறப்பட்டுள்ளதால் இனி 30 முதல் 35 நோயாளிகளுக்கு டயாசிலிஸ் செய்யலாம் என்றனர் அவர்கள்.