வயதால் முதிர்ந்த மூத்தவர்கள் நோயாளிகள் அல்ல. அவர்களுக்கு பல்வேறு காரணிகளால் உதவிகள் தேவைப்படுகின்றன என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறினார்.
சென்னை சூளைமேட்டில் வயது முதிர்ந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட அம்மா சரணாலயத்தை அவர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
கடந்த 1949-ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவியாக நான் இருந்த போது நோய் தணிப்புத் தொடர்பாக அறிந்து கொண்டேன். அப்போது நடந்த மருத்துவ அதிகாரிகள் கூட்டத்தில் மூத்த மருத்துவரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அது குறித்துப் பேசினார். அவரது பேச்சு எனது சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது.
எந்தப் பெரிய வியாதிகளும் இல்லாத முதியோர்களும் நோயுடைய முதியவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறார்கள். நோய்களை உடைய முதியவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தேவைப்படுவதால் அவர்களை தனித்து வைக்க வேண்டும். முதியவர்களாக இருப்பவர்களை நோயாளிகளாகக் கருதக் கூடாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணிகளுக்காக உதவிகளைக் கோருவார்கள். தங்களை மகிழ்வுடன் வைத்துக் கொள்வது, காத்துக் கொள்வது போன்ற பல காரணிகளுக்கு உதவிகள் கோருவர். இப்போது தொடங்கப்பட்டிருக்கும் அம்மா சரணாலயம் அந்த உதவிகளைப் பூர்த்தி செய்து ஒரு வீடு போன்ற சூழலை உருவாக்கும் என நம்புகிறேன். நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் மட்டுமின்றி குடும்ப ஒத்துழைப்பும், ஆன்மிக ஆதரவும் தேவைப்படுகிறது என்றார் சாந்தா.
அம்மா சரணாலயத்தின் நிறுவனரான அம்மா மருத்துவமனை தலைவர் டி.சுரேஷ் கூறுகையில், நோயுள்ள முதியோர்களுக்கு வீடு போன்று இங்கேயே மருத்துவ உதவிகளும், அரவணைப்பும் வழங்கப்படும். மிகக் குறைந்த அளவில் மாதக் கட்டணம் செலுத்தி தங்கிக் கொள்ளும் வசதி உள்ளது என்றார்.