பேறுகாலப் பலன் திட்டத்தின் (எம்பிபி) கீழ் நடைமுறையில் இருக்கும் முறையை மாற்றி முதல் பிரசவத்துக்கு மட்டும் முழு பலனையும் அளிக்கும் வகையிலான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், "நாடு முழுவதும் பேறுகாலப் பலன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின்படி முதல் இரண்டு பிரசவங்களுக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும். நிதி உதவியை முதல் பிரசவத்துக்கு மட்டுமாக குறைக்கலாம் என்ற முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்றார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியபோது, பேறுகாலப் பலன் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்தத் திட்டமானது கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 56 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேறுகாலப் பலன் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிரசவ காலத்திலும், குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ரூ.6,000 நிதி உதவித் தொகை வழங்கப்படும். முதல் இரண்டு பிரசவத்துக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
நிகழ் நிதியாண்டில் (2017-18) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.