50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் அன்றாட உணவில் அதிகப்படியான புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி.குறைவான புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொண்ட பெண்களை விட அதிகப் புரதச் சத்துள்ள உணவினை உட்கொண்ட பெண்களுக்குத் தான் இதய நோய் வர வாய்ப்பிருக்கிறது என ஆய்வு முடிவில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் போது, காய்கறிகளிலிருந்து கிடைக்கும் புரதத்தை சாப்பிட்டவர்களுக்கு பிரச்னை எதுவும் இருக்கவில்லை ஆனால் இறைச்சியிலிருக்கும் புரதச் சத்தானது இதயத்துக்கு கெடுதலை விளைவிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மொஹமத் ஃபிராஸ் பார்பர்.
மாமிசத்தில் உள்ள புரதச் சத்துக்கும் பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கும் தொடர்பிருப்பதாக இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளும் கூறியுள்ளன. மெனோபாஸ் முடியும் காலத்தில் பெண்கள் பலவீனமாக இருப்பார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் உணவு குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை. எத்தகைய உணவு வகைகளை உட்கொண்டால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்பதை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் பார்பர்.
50 வயதுக்கு மேல் பெண்களின் டயட்டில் நிச்சயம் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் குறைவான அளவில் கொழுப்புச் சத்துள்ள பால் பொருட்கள், கோழி இறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளள வேண்டும். அதே வேளையில் சிகப்பு இறைச்சி, இனிப்பு வகைகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். எப்போதாவது சாப்பிட நேர்ந்தாலும் புரதச் சத்து நீக்கப்பட்ட இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன்களை சாப்பிட வேண்டும். இது அவர்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் லூசியானாவிலுள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சயின்டிஃபிக் செசெஷன்ஸ் 2016-ல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.