ஆமதாபாத், டிச.28: இந்தியாவில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவின் ஹூன்டாய் நிறுவனம் மேலும் ஒரு ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக அந்த ஆலையின் உயர் அதிகாரிகள் குழு 10 நாள்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து இடத்தை பார்வையிட்டு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொலேரா எனுமிடத்தை இக்குழுவினர் பார்வையிட வந்ததாக குஜராத் மாநில தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு, இந்த இடம் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பி அதன் பிறகு முடிவு தெரிவிப்பதாக கூறிச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.
தொலேராவில் சுற்றுப் பயணம் செய்த அதிகாரிகள் குழு தங்களது இறுதிஅறிக்கையை இயக்குநர் குழுவுக்கு அளித்த பிறகு இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தொலேரா எனும் பகுதியானது சிறப்பு முதலீட்டு (எஸ்ஐஆர்) பிராந்தியமாகும். இங்கு 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது.
இந்தப் பகுதியை தில்லி, மும்பையில் உள்ள தொழில்பேட்டை போல மாற்றியமைக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.400 கோடி முதலீடு: இதனிடையே டீசல் கார் தயாரிப்புக்கு ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக ஹூன்டாய் அறிவித்துள்ளது. இந்த டீசல் கார் தயாரிப்புக்கான இடத்தைத்தான் அந்நிறுவனம் தேடி வருகிறது.
இந்த ஆலையில் டீசல் இன்ஜின்கள் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் இந்த ஆலை செயல்படத் தொடங்கும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஹூன்டாய் நான்காமிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு இரண்டு ஆலைகள் சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல்படு
கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.