முகப்பு
இந்தியா

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்: இரு நபர் விசாரணைக் கமிஷன் நியமனம்

மும்பை, ஜன. 8: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக இரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் மும்பையில் செய்தியாளர்களிடம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

மும்பை, ஜன. 8: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக இரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

 ஆதர்ஷ் குடியிருப்பு விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் தலைமையில் இரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மாநில முன்னாள் தலைமைச் செயலர் பி. சுப்பிரமணியன் இந்த கமிஷனின் மற்றொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஆதர்ஷ் குடியிருப்பு அமைந்துள்ள இடம் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலமா? அந்த குடியிருப்பில் யார் யாருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன, என்ன அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன ஆகியவை குறித்து கமிஷன் விசாரணை நடத்தும்.

 கடலோர ஒழுங்கு முறை விதிகளை மீறி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதா? வீடுகள் ஒதுக்கீட்டில் குறுக்கிட்ட அதிகாரிகள் யார் என்பவை குறித்தும் கமிஷன் விரிவான விசாரணை மேற்கொள்ளும். 3 மாதங்களில் கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை வழங்க கமிஷனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய மாநில அரசு உறுதிப் பூண்டுள்ளது என்று முதல்வர் அசோக் சவாண் தெரிவித்தார்.

 ஆதர்ஷ் ஊழல் விவகாரம் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்று கடந்த குளிர்கால பேரவைத் தொடரில் மகாராஷ்டிர அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து இப்போது கமிஷனில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக மும்பை கொலபா பகுதியில் 6 மாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் குடியிருப்பை ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கட்டியது.

 ஆனால், 6 மாடிக்குப் பதிலாக 31 மாடிகள் கட்டப்பட்டதாகவும், அரசியல்வாதிகள், மாநில அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

 மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணின் உறவினர்களுக்கும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தால் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →