ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்
புது தில்லி, மே 4: இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், 1987-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமல்படுத
புது தில்லி, மே 4: இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், 1987-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் எம்பி ஸ்ரீரங்கா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆறு நாள் பயணமாக இலங்கை சென்று வந்த இந்திய எம்பிக்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து, இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து விளக்கினர். இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு மூன்று நாள் பயணமாக தில்லி வந்த இலங்கை எம்பி ஸ்ரீரங்கா சுஷ்மா ஸ்வராஜை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து "தினமணி' நிருபரிடம் ஸ்ரீரங்கா கூறியது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால்தான் இந்திய - இலங்கை உடன்பாடு உருவானது. போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தத் தடையும் இல்லை.
இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றும் வகையில் இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மட்டும் கூறாமல், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தினேன்.
ராஜீவ் காந்தி கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம். இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு கடைப்பிடித்து உள்ளது. அதைப் போல் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இதை சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும். அதற்கான நிர்பந்தத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் தமிழர் பிரச்னைக்கு முதல்கட்ட தீர்வாக அமையும். இலங்கைக்கு எதிரான ஐநாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க தமிழக கட்சிகள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தியது போல் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாட தமிழகக் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று இலங்கை தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கல்வி, சுகாதாரம் ஆகிய தேவைகளை செய்து தர தமிழக அரசியல் கட்சிகள் இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கா கூறினார்.