இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் குறித்த மக்களின் எண்ணங்களை வருகிற குடியரசு தினத்துக்குள் தெரிவிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் முதல் அகில இந்திய வானொலியில் மாதம் இருமுறை 'மான் கி பாத்' (மனதில் பட்டதை பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். நிகழ் ஆண்டின் கடைசி உரை இன்று ஒலிபரப்பானது. அதில் மோடி பேசியதாவது:
அடிப்படி உரிமைகள் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெறுகின்றன. அது தேவைதான். ஆனால், அதே நேரத்தில் நமது அடிப்படை கடமைகள் குறித்து சிறிதளவிலேயே பேசப்படுகிறது. நமது அரசியல் சாசனம், அடிப்படை கடமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
தேர்தல் நேரத்தில் மட்டும், வாக்களிப்பது குறித்த அடிப்படை கடமை குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த பி.ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் ஆண்டு விழாவை கொண்டாடும் இந்நேரத்தில், குடியரசு தினத்துக்கு முன்னதாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடையே 'கடமைகள்' குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்த வேண்டும்.
மேலும், இந்திய மக்கள் ஒவ்வொருவரும் அடிப்படை கடமைகள் குறித்த தங்களது எண்ணங்களை www.mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் கடமைகள் குறித்த மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், குடியரசு தினத்துக்கு முன்னதாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளை சுத்தப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என்றார் மோடி.
அடிப்படை உரிமைகள்
1. தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேண வேண்டும்.
3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
5. அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
7. காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.