ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரங்களை இந்தியா ஒருபோதும் ஏற்று கொள்ளாது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
துருக்கியின் அண்டாலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மோடி இன்று இதை தெரிவித்தார்.
'எனது அரசு ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துகள் தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது' என்றார் மோடி.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துகளை மீட்பதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டும் என்றார் மோடி.
அதிக மூலதன தேவைகள், வளரும் நாடுகளின் வங்கி சேவைகளை பாதிக்கக்கூடிய அளவில் இருக்கக் கூடாது. மேலும், நவீன தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் மூலதன தேவைகளை குறைக்க முடியும்.
இணைய பாதுகாப்பு முறையை மேம்படுத்துவது மூலமே தான் வங்கி செயல்பாடுகளை பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்தினார் மோடி.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய ஒதுக்கீடு குறித்த சீர்திருத்தங்களில் அமெரிக்க அரசு கையெழுத்திட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் என்பது இட ஒதுக்கீடு சார்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமே தவிர கடன் வளங்களை சார்ந்திருக்கக் கூடாது. அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஒதுக்கீடு குறித்த சீர்திருத்தங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.