பாலியல் குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை: மத்திய அரசு
பாலியல் குற்றவாளிகளின் பெயர், வயது, கைரேகை, மரபணு மாதிரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வகை செய்யும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
புது தில்லி: பாலியல் குற்றவாளிகளின் பெயர், வயது, கைரேகை, மரபணு மாதிரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வகை செய்யும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்:
பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் விவரங்களை பதிவு செய்ய வகை செய்யும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடனும் மாநில அரசுகள், பொதுமக்களுடனும் ஆலோசனை நடத்தி கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன.
Advertisement
வரைவு வழிகாட்டுதல்களின்படி பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் பெயர், புனைப்பெயர், அழைக்கும் பெயர், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், தாற்காலிகமாக தங்கும் இடம், பயணம், குடியுரிமை ஆவணங்கள், வேலை செய்யும் இடம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற உரிமங்கள் என அனைத்துத் தகவல்களையும் பெற்று பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி கூறியுள்ளார்.