இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
தேசிய கடற்படை தினத்தையொட்டி, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி சுனில் லாம்பா, இதுதொடர்பாக பேசியதாவது:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து, கடற்பகுதியில் அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை நிறுத்தி வைத்துள்ளது. அந்த நீர்மூழ்கிக் கப்பல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து வந்துள்ளது.
இப்போது வரையில், இந்திப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் நிறுத்தப்பட்டு வருவது கவலையளிக்கும் செயலாக உள்ளது. அந்தக் கப்பல்களையும், அவற்றின் இயக்கத்தையும் இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனக் கப்பல்களின் நடமாட்டத்தை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இந்நிலையில், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, பாகிஸ்தான் கடற்படையில் அத்துமீறி நுழைந்து விட்டதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியிருப்பது தவறானது. எந்தவொரு இடத்திலும் தேவைப்பட்டால் மட்டுமே நீர்மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை நிறுத்தும். "ஐஎன்எஸ் கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை இயக்கம் நடைபெற்று வருகிறது. அந்தக் கப்பல், அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டுவிடும். தென்சீனக் கடலில் நிலவும் பிரச்னைகளுக்கு ஐ.நா. கடல்சார் சட்டத்தின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்றார் அவர்.