ரூ.3767 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல்: சி.பி.ஐ காவலில் முன்னாள் விமானப்படைத் தளபதி!
ரூ.3767 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் விமானபடை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட மூவரையும் டிசம்பர் 14-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம்.
புதுதில்லி: ரூ.3767 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் விமானபடை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட மூவரையும் டிசம்பர் 14-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
முக்கிய நபர்கள் பயணம் செய்வதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்ட்டா வெஸ்ட்லான்ட் ஆயுத விற்பனை நிறுவனத்திடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ரூ.3767 கோடி அளவிற்கு பணப்பரிவர்தனைகள் சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முன்னாள் விமானபடை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது சகோதரர் சஞ்சீவ் தியாகி மற்றும் தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கைதான் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தில்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற நீதிபதி சுஜித் சவுரப் முன் சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி சவுரப் மூவரையும் வரும் 14-ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நாட்டிலேயே முதன் முறையாக ஊழல் குற்ற விசாரணை ஓன்றுக்காக கைது செய்யப்பட்ட படையணிகளுள் ஒன்றின் தளபதி தியாகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.