அன்றும் இன்றும்: காங்கிரஸ் கட்சியை நேரடியாகத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி
அன்று ஊழல் செய்த மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடின, இன்று ஊழலை ஒழிக்க போராடும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகக் கூறியுள்ளார்.
புது தில்லி: அன்று ஊழல் செய்த மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடின, இன்று ஊழலை ஒழிக்க போராடும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகக் கூறியுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது பற்றி, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு ஆட்சி செய்த மத்திய அரசு ஊழல் செய்தது. அதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இப்போதோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க நடக்கும் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று கூறியதாகத் தெரிவித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுதான் காங்கிரஸ் கட்சி, தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றா? என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், பணப் புழக்கத்தைத் தவிர்த்துவிட்டு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளதாக ஆனந்த் குமார் கூறினார்.
அதாவது, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுதாகக் கூறினார். இதன் மூலம், ஊழல் மற்றும் கருப்புப் பணம் ஒழியும் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.