கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலித் மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வழக்கில் 5 மூத்த மாணவர்கள் சரண் அடைந்துள்ளனர்.
டிசம்பர் 2ம் தேதி இரவு, கல்லூரியின் மாணவர் விடுதியில், நடந்த இந்த ராகிங் கொடுமையில் ஒரு மாணவருக்கு சீறுநீரகம் பாதிக்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தலித் மாணவருக்கு இதுவரை 3 முறை டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சூரைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர், அவிநாஷ் ஆகும். அவரையும், மேலும் 8 மாணவர்களையும், மூத்த மாணவர்கள் கடந்த 2-ஆம் தேதி இரவு நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் தரையில் நீச்சல் அடித்தல், குதித்தல் போன்ற கடுமையான பயிற்சிகளை செய்யுமாறு மூத்த மாணவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுபோல் சுமார் 5 மணி நேரம், அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அப்போது அந்த மாணவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டபோதும், அவர்களை மூத்த மாணவர்கள் விடவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு அவிநாஷ் வந்துள்ளார். அப்போது அவிநாஷின் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், மருத்துவமனையில் அவரை உடனடியாக பெற்றோர் சேர்த்துள்ளனர்.
அப்போது அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவிநாஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல், மற்றோர் மாணவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணவர் அவிநாஷை மூத்த மாணவர்கள் 9 பேர் சித்ரவதை செய்த தகவலை அவரது தந்தையிடம் நண்பர்கள் கடந்த 15-ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அவிநாஷ் உள்ளிட்ட மாணவர்களை சித்ரவதை செய்த மூத்த மாணவர்கள் 9 பேருக்கு எதிராகவும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், 5 மாணவர்கள் இன்று காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.