புது தில்லி: தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊழல் புரியலாமா? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எனது கட்சித் தொண்டர்களும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் கட்சிக்கு, மக்களவையில் 6 எம்பிக்கள் உள்ளனர். ஆனால் கட்சி வங்கிக் கணக்கில் வெறும் ரூ.1,03,198 மட்டும்தான் நிதியுள்ளது.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் மகள் என்பது, ஊழல் புரிவதற்கு அளிக்கப்பட்ட உரிமம் அல்ல. கட்சியின் வங்கிக் கணக்கில் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தனது கடமையை செய்ய மாயாவதி விட்டுவிட வேண்டும். உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அந்த முடிவை மாயாவதியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாதும் விமர்சித்து வருகின்றனர்.
ஏனெனில், அந்த முடிவால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுதான், மத்திய அரசின் முடிவை அவர்கள் எதிர்ப்பதற்கு காரணம்.
மாயாவதியின் சகோதரர் கணக்கில் ரூ.1.43 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் மாயாவதி தன்னை நிரபராதி என்று நிரூபிப்பது அவசியம். மாயாவதியின் சகோதரர் யார்? அவருக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? ஏன் இதை கண்டு மாயாவதி பயப்படுகிறார்? எனத் தெரியவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தொடர்பான தகவல் வெளிவந்திருப்பது, வெறும் தொடக்கம்தான். இதுதொடர்பாக மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்புத் தொடர்பான முடிவை மத்திய அரசு எடுத்ததும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவும், மாயாவதியின் சகோதரர் கணக்கில் ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாயாவதி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.