ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராமர் பாலத்தை தகர்க்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டால் உடனே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியது. அந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த மணல் திட்டு புராணக்காலத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலம் என கூறி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், அதை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனிடையே ராமர் பாலம் இடிக்கப்படமாட்டாது என மத்திய அரசு உறுதியளித்தது. இதையடுத்து தனது மனுவை திரும்ப பெறுவதாக சுவாமி கூறினார். அந்த மனுவுக்கு நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ராமர் பாலம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், அவசரமாக விசாரிப்பதற்கு தேவையில்லை. அரசு ராமர் பாலத்தை தொடாத நிலையில் அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்றனர்.
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளிலிருந்து தென் கடற்கரைப் பகுதிக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றி வரவேண்டியுள்ளது. இந்தியாவின் கிழக்குப் பகுதியான வங்கக் கடலில் சில இடங்களில் போதிய ஆழம் இல்லாமல் மணல் திட்டுகள் உள்ளதாலே இந்நிலை உள்ளது.
இதையடுத்து இப்பகுதியில் கப்பல்கள் சென்று வரும் வகையில் ஒரு நீர்வழி கால்வாயை ஏற்படுத்துவது சேது சமுத்திரம் திட்டமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.