கன்னையா குமாரின் ஜாமீன் வழக்கு பிப். 29 ஒத்திவைப்பு
கன்னையா குமாரின் ஜாமீன் வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமாரின் ஜாமீன் வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்னையா குமார் இருமுறை ஆஜர்படுத்தப்பட்ட போது, தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் நேரிடையாக ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
Advertisement
இதையடுத்து கன்னையா குமார் ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தேச துரோக வழக்கில் கைது செய்யும் வகையில் தான் இந்தியாவுக்கு எதிராக எவ்வித முழக்கங்களையும் எழுப்பவில்லை என கூறியிருந்தார் கன்னையா குமார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தில்லி போலீஸின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். எனவே, கன்னையா குமாரை மீண்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
எனினும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.