ஆமதாபாத்: குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 4-வது முறையாக ஜூன் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையம் அருகே கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சபர்மதி ரயிலில் எஸ்-7 பெட்டி, ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், கரசேவகர்கள் 58 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது, ஆமதாபாத் அருகே உள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் சுமார் 400 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களில் 6 பேர் விசாரணையின்போதே உயிரிழந்து விட்டனர்.
இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதலில் இவ்வழக்கில் தண்டனை விவரம் 6-ம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தண்டனை விவரத்தை 9-ம் தேதி, 11-ம் தேதி, 13-ம் தேதி என மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டன. இப்போது, 4-வது முறையாக வரும் 17-ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.