கருப்புப் பணம், பாகிஸ்தான் விவகாரங்களில் மோடியை சரமாரியாக தாக்கிய ராகுல்
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது கருப்புப் பணம், பாகிஸ்தான் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கடுமையாக விமரிசனம் செய்தார் ராகுல் காந்தி.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது கருப்புப் பணம், பாகிஸ்தான் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கடுமையாக விமரிசனம் செய்தார் ராகுல் காந்தி.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
மும்பை தாக்குதலுக்குப் பிறகு 'சிறு கூட்டில்' அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை, பிரதமர் தனது திடீர் லாகூர் பயணம் மூலம் திறந்துவிட்டுள்ளார். இதன் மூலம் ஆறு ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரே நாளில் மோடி தகர்த்துள்ளார்
Advertisement
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற வேலைகள் அனைத்தும் நம்மை பெருமைப்படுத்துகிறது. பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டன. சுயஉதவி குழுக்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
எவ்வித நோக்கமுமின்றி பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக தனது பிரயாணத்தையே மாற்றுகிறார். நாகா கூட்டறிக்கை வெளியிடும் முன் பிரதமர் மோடி யாரையும் கலந்து ஆலோசிப்பதில்லை. ஏன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைகூட கேட்பதில்லை. தனி மனிதாக கடந்த 6 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்த சாதனைகளை தகர்த்து வருகிறார் மோடி.
பலவிதமான தொடர் முயற்சிகளுக்குப் பிறகு பாகிஸ்தானை சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைபடுத்த முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சி மேற்கொண்டது. குறிப்பாக பாகில்தான் பயங்கரவாதிகளு ஆதரவான நாடு என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதில் வெற்றி கண்டது.
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இந்த அரசு 'ஃபேர் அன்ட் லவ்லி' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட வரியை செலுத்திவிட்டு அதை வெள்ளையாக்கிக் கொள்ளலாம்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தில்லியில் மாணவர்களும், ஊடகத்துறையினரும் தாக்கப்பட்ட போதும் பிரதமர் வாயே திறக்கவில்லை என்றார்.
சுமார் அரை மணி நேரம் பேசிய ராகுல் காந்தி பிரமதர் மோடியை சரமாரியாக தாக்கினார்.