ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஜம்மு-காஷ்மீரில் நீடித்த சிக்கலான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்று மாலை பிடிபி கட்சி எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில், பிடிபி சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னணி
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து பிடிபி-பாஜக இணைந்து ஆட்சியமைத்தன. பிடிபி கட்சியின் நிறுவனர் முஃப்தி முகமது சயீது மாநிலத்தின் முதல்வரானார்.
இந்நிலையில், முஃப்தி முகமது சயீது அண்மையில் மறைந்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கூட்டணி ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி புதிய நிபந்தனைகளை விதித்ததாகவும், அவற்றை பாஜக ஏற்றுக்கொள்ளாததே ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்படக் காரணம் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.