லிபியாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் இறந்தனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கோண்டாடு பகுதியைச் சேர்ந்த சத்தியன் நாயர் மகள் சுனு சத்தியன் (31), ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள லிபியாவில் உள்ள 'ஷாவியா மெடிக்கல் சென்டர்' என்ற மருத்துவனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் விபின் குமாரும் இங்கு செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த செவிலியர் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, சுனு வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது நேற்று இரவு வெடிகுண்டு வீசப்பட்டது.
அப்போது வீட்டிலிருந்த சுனுவும், அவரது ஒன்றரை வயது மகனும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். இச்சம்பவத்தின் போது விபின் குமார் பணிக்குச் சென்றிருந்தார்.
இதனிடையே தனது மகள் இறந்தது குறித்து கேள்விப்பட்ட சுனுவின் தந்தை சத்தியன் கேரள மாநில அரசிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் லிபியாவில் மரமணடைந்த தனது மகள் மற்றும் பேரனின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லிபியாபில் இந்திய செவிலியர் இறந்தது குறித்து விரிவானத் தகவல்களை தருமாறு லிபியாவுக்கான இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, லிபியாவில் தவிக்கும் 9 பேரை திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.