ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாராமுல்லாவின் புறநகர்ப்பகுதியான ஜபான்ஸ்போரா பகுதியில் உள்ள ராணுவத்தின் 46ஆவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு முகாம் மீது 6 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினர். இதையடுத்து முகாமில் இருந்த வீரர்கள் திருப்பிச் சுட்டனர். அவர்களுக்குத் துணையாக எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை அதிரடித் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், தற்போது ராணுவ முகாம் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரு வாரங்களுக்குப் பிறகு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.