முகப்பு
இந்தியா

கட்டாரா கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனையை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிதீஷ் கட்டாரா கொலை வழக்கில், குற்றவாளி விகாஸ் யாதவுக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

Updated On : 3 அக்டோபர், 2016 at 12:20 PM
பகிர்:


புது தில்லி: மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிதீஷ் கட்டாரா கொலை வழக்கில், குற்றவாளி விகாஸ் யாதவுக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சுக்தேவ் பெஹல்வானுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தில்லியைச் சேர்ந்த நிதீஷ் கட்டாரா (25) என்ற தொழிலதிபர் கடந்த 2002-ஆம் ஆண்டு கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் டி.பி.யாதவின் மகன் விகாஸ் யாதவ், அவரது உறவினர் விஷால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்தது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான டி.பி.யாதவின் மகள் பாரதி. இவரை நிதீஷ் கட்டாரா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2002-இல் காஜியாபாதில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நிதீஷ் கட்டாரா பங்கேற்றார்.

Advertisement

அதே நிகழ்ச்சியில் விகாஸ் யாதவும், அவரது உறவினர் விஷாலும் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, கட்டாராவை காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் இருவரும் சென்றதாகக் கூறப்படுகிறது.

கூலிப்படைதுணையுடன் கட்டாராவை இருவரும் கொலை செய்ததாக புகார் எழுந்தது.

அந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவர்கள் மூவரையும் குற்றவாளிகள் என கடந்த 2008-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி உறுதி செய்து, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மூவருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 25 ஆண்டுகளாக அதிகரித்து தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2015-ஆம் ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவருடைய தண்டனையையும் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.