கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் வழக்கமான சோதனையின்போது, காரில் சுமார் ரூ.2 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்ததாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் சித்தார்த்தா (39) போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள உயர் நீதிமன்றத்துக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை மதியம் சித்தார்த்தா காரில் வந்தார். வழக்கமாக காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கட்டுக்கட்டாக ஒரு பெட்டியில் பணம் வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்தோம். அவரிடம் விசாரித்தபோது, உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்று அவர் கோரினார். பணம் எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்தும் எங்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் முழுமையாக இன்னமும் தெரியவில்லை.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு சித்தார்த்தா விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக சனிக்கிழமை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சித்தார்த்தா மனைவியின் தந்தையும் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.