முகப்பு
இந்தியா

பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரும் மனுவை ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 22 செப்டம்பர், 2016 at 4:35 PM
பகிர்:


ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய ரக கூர்மையான தோட்டக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுக்கு (பெல்லட்) தடை விதிக்கக் கோரும் மனுவை ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகவும் போலீஸார் பெல்லட் ரக துப்பாக்கியால் சுடுவது வழக்கமாக உள்ளது.

இந்த வகை தோட்டாக்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், கண்களில் பட்டால் கண்கள் பார்வைத் திறனை இழந்துவிடுகின்றன. இதனால் இதைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

Advertisement

இந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமது மக்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை தடை செய்ய விரும்பவில்லை.

ஜம்மு- காஷ்மீரில் போராட்டக்காரர்களால் வன்முறை நீடிக்கும் நிலையில் போலீஸார் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.

எனவே, பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.