புது தில்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக - கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, புது தில்லியில் உள்ள ஷ்ராம் சக்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் கூட்டம் தொடங்கியபோது, தனது இரு பக்கத்திலும் நின்றிருந்த சித்தராமையா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது, இருவரின் கைகளையும் பிடித்து கைகுலுக்கி தோழமை பாராட்டும்படி உமா பாரதி அன்புக் கட்டளை பிறப்பித்தார்.
உமா பாரதியின் அன்புக் கட்டளைக்கு இணங்க இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகுலுக்கிய சித்தராமையா, ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.