மும்பை: இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் திட்டத்தில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர்.