குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை
'நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, 'உலக சுகாதார தினம்' ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி சுட்டுரை வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
உலக சுகாதார தினத்தையொட்டி அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் திகழ இறைவனை வேண்டுகிறேன். ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் அனைவரும் தத்தம் கனவுகளில் வெற்றி பெற முடியும். நாட்டில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதன் ஓர் அங்கமாக அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உலக சுகாதார தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மன அழுத்தமாகும். இதுகுறித்து அண்மையில் வானொலியில் ஒலிபரப்பான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நான் பேசியுள்ளேன் என்று அந்த செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.