வங்கதேசப் பிரதமர் இந்தியா வருகை: மரபுகளை புறந்தள்ளி நேரில் சென்று வரவேற்றார் மோடி
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி மரபுகளை விலக்கி வைத்து விட்டு தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி மரபுகளை விலக்கி வைத்து விட்டு தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், இத்தனை ஆண்டுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் தாண்டி பிரதமர் செயல்பட்டிருப்பது பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வெள்ளிக்கிழமை தில்லி வந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு பிரதமர் மோடி பூங்கொத்து வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அப்போது மத்திய அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.
வழக்கமாக வெளிநாட்டுப் பிரதமர் எவரேனும் இந்தியா வந்தால், பிரதமர் நேரில் சென்று வரவேற்பது மரபு அல்ல. மாறாக, மத்திய அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளுமே வரவேற்பது வழக்கம். ஆனால், அந்த நடைமுறையை புறந்தள்ளி விட்டு பிரதமர் மோடி செயல்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியப் பயணத்தின்போது ஷேக் ஹசீனா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக, வங்கதேசம் - கொல்கத்தா இடையேயான ரயில் சேவையின் சோதனை ஓட்டத்தை மோடியும், ஹசீனாவும் சனிக்கிழமை (ஏப்.8) தொடங்கி வைக்கின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும், விமான நிலையத்துக்குச் சென்று பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.