பெங்களூரு: அவுரங்காபாத் - ஹைதராபாத் பயணிகள் ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம் மற்றும் கால்காபூர் கிராமங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் அனைவரும் உயிர்தப்பினர்.
இந்த விபத்தில் ரயில் என்ஜின் மற்றும் ரயிலின் இரு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றது. இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு உள்ளது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பால்கி தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்து நேரிட்ட மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கவிழ்ந்து கிடக்கும் என்ஜின் மற்றும் பெட்டிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது, விபத்து நேரிட்ட பகுதிக்கு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.