சென்னை: தில்லியில் 41 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு, நடிகை சிநேகா-பிரசன்னா தம்பதியினர் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
தில்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 41 நாள்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல தரப்பில் இருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடிகை சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.
இது குறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பெரியளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும், சிறிய அளவில் உதவி செய்துள்ளோம்.
தில்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என பிரசன்னா கூறியுள்ளார்.
இந்த உதவியை நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை. எங்களைப் போல் அனைவரும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று சிநேகா கூறினார்.