முகப்பு
இந்தியா

தூய்மை இந்தியா இணையதளத்தில் கசிந்த ஆதார் விவரங்கள்: மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி

ஒரு பக்கம் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு, மறுபக்கம் ஆதார் தகவல்களை ஏகத்துக்கும் இணையதளங்களில் கசியவிட்டு சர்ச்சையிலும் சிக்குகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:22 PM
பகிர்:


சென்னை: ஒரு பக்கம் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு, மறுபக்கம் ஆதார் தகவல்களை ஏகத்துக்கும் இணையதளங்களில் கசியவிட்டு சர்ச்சையிலும் சிக்குகிறது.

பல முக்கிய நபர்களின் ஆதார் எண்கள் இணையதளங்களில் வெளியாகி, அவை சமூக தளங்களில் வைரலானது. இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், திங்கட்கிழமையும் இதே பிரச்னை எழுந்தது. இந்த முறை தவறை செய்தது மத்திய நீர் மற்றும் துப்புரவுத் துறையின் கீழ் செயல்படும் தூய்மை இந்தியா அமைப்பின் இணையதளம்.

சண்டிகரின் உணவு, வழங்கல் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் பெறப்பட்ட ஆதார் எண் தொடர்பான அனைத்து விவரங்களும் தூய்மை இந்தியா இணையதளத்தில் வெளியானது. இதில், ரேஷன் அட்டை எண், குடும்பத் தலைவரின் பெயர், பிறந்த தேதி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, இனம் என அனைத்துத் தகவல்களும் வெளியாகியுள்ளது.

தூய்மை இந்தியா இணையதளத்தில் வெளியான ஆதார் எண் மற்றும் விவரங்கள் குறித்து சர்ச்சை எழுந்ததுமே, உடனடியாக அது நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு முன்பே எக்ஸ்பிரஸ் குழுவால் அந்த செய்தி பதிவு செய்யப்பட்டுவிட்டது.

ஏற்கனவே, ஆதார் எண்ணை அடிப்படை சேவைகளைப் பெற கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டும், ரேஷன் மானியம், சிலிண்டர் மானியங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு கட்டாமான கேள்வியை எழுப்பியது.

ஜார்க்கண்ட் மாநில அரசின் இணையதளத்திலும் இதுப்போன்ற தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதுவரை, ஆதார் எண்ணை திரட்டிய தனியார் நிறுவனங்கள்தான் தகவல்களை கசிய விட்டதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்து வந்த நிலையில், மேற்கண்ட சம்பவம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இருந்தே, ஆதார் எண் மற்றும் பயோ மெட்ரிக் முறையில் திரட்டப்பட்ட தகவல்களை வெளியிடுவதோ, பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைப்பதோ சட்டப்படி தவறு என்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட விதியை யாரும் படிக்கவில்லை என்பதே உண்மை.

முழு கட்டுரையைப் படிக்க →