சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கேரள அறநிலையத் துறைக் கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்பது மரபு. இந்நிலையில், அந்தக் கோயிலில் சில பெண்கள் வழிபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் பரவின.
இது, கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்மாநில அறநிலையத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதன்பேரில், அறநிலையத் துறைக் கண்காணிப்புக் குழுவினர் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வநத்னர். இந்நிலையில், இந்தக் குழுவின் அறிக்கையானது கேரள அரசிடம் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், சபரிமலை கோயிலுக்குள் இளம்பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபடுவது போன்று வெளியான புகைப்படங்களில் இருக்கும் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.