பெங்களூரு: கன்னடம் தெரியாத வங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கன்னட மாநில மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், கர்நாடகாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் ஊரக, சிறுபான்மையினருக்கான வங்கியின் தலைவர்களுக்கு அறிவுரைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காத வங்கி ஊழியர்கள் 6 மாதத்துக்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், பணி நியமன விதிமுறைப்படி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகளில் ஹிந்தி பயிற்சி மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போல கர்நாடகாவில் அனைத்து வங்கிகளிலும் கன்னடப் பயிற்சி மையம் நிச்சயம் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளிலும் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு உள்ளூர் மக்களையே பணியமர்த்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஹிந்தி திணிப்பு என்று மட்டும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், ஹிந்தி திணிப்புக்கு எதிராக, தங்கள் மாநிலத்தில் கன்னடத்தை வலுவூட்டும் கர்நாடக அரசின் முயற்சி பல மொழியார்வளர்களால் வரவேற்கப்படுகிறது.