முகப்பு
இந்தியா

காவிரி வழக்கில் மத்திய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது: தமிழகம் வாதம்

காவிரி வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

காவிரி வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 15-ஆவது நாளாக புதன்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, 'கூட்டாட்சித் தத்துவத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் 11,700 குளங்கள் உள்ளன. குளங்களில் உள்ள நீர் இருப்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள நீரின் மொத்த அளவு எவ்வளவு என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஹேமாவதி அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இந்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது' என்றார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்ஜித் குமார், 'கூட்டாட்சி தத்துவத்தும் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பேசுகிறது. ஆனால், கூட்டாட்சித் தத்துவம் தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தில் பேசாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஆகஸ்ட் 17) ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →