சரத் யாதவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி விரைவில் கடிதம் எழுதவுள்ளது.
பிகார் முதல்வர் நீதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அண்மையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்தார். இதையடுத்து, அவர் மாநிலங்களவையின் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் கட்சி உத்தரவை மீறி சரத் யாதவ் பங்கேற்றார். இதனைக் காரணமாக வைத்து அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரி மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கடிதம் எழுதவுள்ளது.
இது தொடர்பாக, தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சி உத்தரவை மீறி எதிர்க்கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் பங்கேற்றது கட்சி விரோத நடவடிக்கையாகும். இதனை காரணமாக வைத்து அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். இதே காரணத்துக்காக ஏற்கெனவே முஃப்தி முகமது சையீத், உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுத இருக்கிறோம் என்றார் அவர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிறுவன உறுப்பினரான சரத் யாதவ், கட்சியின் தலைவராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே, அவருக்கு 2022-ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ளது.
பிகாரில் லாலு, நிதீஷுடன் காங்கிரஸ் கட்சியும் இணைந்து அமைத்த மகா கூட்டணி, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் பாஜகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. எனினும், லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மகா கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ், அண்மையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். எனினும், அடுத்த நாளே பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராகி ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.