பாகிஸ்தானுடன் தொடர்பில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு மன்மோகன் சிங் பதிலடி
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை விளக்கமளித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பிரசாரங்கள் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளன. பிரதமர் மோடி மீதான விமர்சனத்துக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் ஐயர், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மணிசங்கர் ஐயர், அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக விருந்தளித்தார். அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமித் அன்சாரி, பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரி, பாகிஸ்தானைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எனவே, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கேள்வி எழுப்பினார். அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலை குறித்து விமர்சித்தார்.
Advertisement
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,
என் மீது பிரதமர் நரேந்திர மோடி அவதூறு பரப்பியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர், குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் ஏதாவது பிதற்றுகிறார். அவ்வகையில் தற்போது என்னை விமர்சித்து அரசியல் லாபம் தேட நினைக்கிறார்.
நான் குஜராத் தேர்தலுக்காக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை சந்தித்ததாக பிரதமர் மோடி கூறுவது எல்லாம் சுத்தப் பொய். மணிசங்கர் ஐயர் அளித்த விருந்தில் மட்டும் தான் நான் கலந்துகொண்டேன். அதில் அவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது அவ்வளவுதான்.
நான் மோடிக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இங்கே உதாம்பூர் மற்றும் குருதாஸ்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, யாருமே அழைக்காமல் நீங்கள் ஏன் பாகிஸ்தான் சென்றீர்கள். பதான்கோட் தாக்குதலின் போது பாகிஸ்தான் உளவு அமைப்பு இங்கு விசாரணை நடத்த எதற்கு அனுமதித்தீர்கள் என்றார்.