காங்கிரஸ் தலைவராக ராகுல் நாளை பதவியேற்பு
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் சனிக்கிழமை பதவியேற்கிறார்.
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா செயல்பட்டு வந்தார். இப்போது 71 வயதாகும் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கு கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைவராவதற்கு விருப்பம் தெரிவித்து, ராகுல் கடந்த 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியா மகன் ராகுல் (47) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து தில்லியில் உள்ள 132 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் டிசம்பர் 16-ந் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். அப்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது.
கடந்த 2013 ஜனவரியில் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.