நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்க எச்-1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என்று 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவி ஏற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகமானது எச்-1 பி விசா வழங்கும் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரு மடங்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு வழி செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது ஏனெனில் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிபவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
டிரம்ப் அரசின் இந்த செயல்பாடு குறித்து, இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனமான 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நாராயணமூர்த்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தங்கள் நாட்டில் அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இதை கையாள இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.
அதேபோல் எந்த நாட்டில் அலுவலகம் அமைக்கிறோமோ அதே நாட்டினரையே பணியில் அமர்த்த வேண்டும். இதன் மூலமே நாம் உண்மையான பன்னாட்டு நிறுவனம் என்ற நிலையை அடைய முடியும். அத்துடன்
நாம் எச்-1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு நாராயணமூர்த்தி தனது பேட்டியில் கூறினார்.