தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக தகுந்த சட்டத்தை இயற்றாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை திறமையான நபர்கள்தான் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் அதற்கென சிறப்புச் சட்டம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் பதவி, தகுதியான நபர்களுக்கு நியமன அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல் சாசனத்தின் 324-ஆவது பிரிவின்படி, தகுந்த சட்டத்தின் வாயிலாகவே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதற்கென தனிச் சட்டமோ அல்லது விதிகளோ வகுக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் ஆணைய நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் வகையிலான விதிகளை வகுக்கக் கோரி அனூப் பரன்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரது வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். அதன் பின்னர் அவர்கள் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புகளுக்கு இதுவரை தகுதியான நபர்களே நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், அதற்கான நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இதற்கென தனிச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றாதது ஏன்?
அத்தகைய சட்டம் இதுவரை இல்லை என்பதற்காக அதனை நீதிமன்றா வகுக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.