புதுதில்லி: மானிய விலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய திட்டப் பயன்களை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும் எனறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப மானிய விலையில் மண்ணெண்ணை வழங்கப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளைகளுக்கு மத்திய அரசு அளிக்கும் மானியத் தொகை தற்போது நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதைதொடர்ந்து, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணைக்கான மானியத் தொகையையும் நுகர்வோர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிட மத்திய எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்த தொகையினைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ''மண்ணெண்ணெய் மானியம் அல்லது பொதுமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அட்டல் யோஜானா திட்டத்தின் பலன்களை பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும். எனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாவர்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும். அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையை பெற வேண்டும் என்றார்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.