முகப்பு
இந்தியா

மாட்டிறைச்சி விவகாரத்தால் கறிக்கோழி விலை மேலும் உயரும்: அசோசெம் தகவல்

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த புதிய தடை உத்தரவால் ஏற்கனவே அதிகரித்துள்ள கறிக்கோழி விலை மேலும் 30% உயரும் என்று அசோசெம் அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:41 PM
பகிர்:


சென்னை: மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த புதிய தடை உத்தரவால் ஏற்கனவே அதிகரித்துள்ள கறிக்கோழி விலை மேலும் 30% உயரும் என்று அசோசெம் அறிவித்துள்ளது.

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்திருக்கும் புதிய தடையால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே கறிக்கோழியின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மேலும் 25 - 30% அளவுக்கு விலை உயரும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பான அசோசெம் கூறியுள்ளது.

மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அதன் எதிரொலியாக கறிக்கோழியின் தேவை அதிகமாவதுதான் இதற்கு மிக முக்கியக்காரணமாகும். கறிக்கோழி நுகர்வும் 35 - 40% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு காரணிகளால், கடந்த மே 2014, மார்ச் 2017 ஆகிய காலக்கட்டங்களில் மாட்டிறைச்சியின் விலைக் குறையீடு 3 சதவீதமாகக் குறைந்த நேரத்தில், பண்ணைக் கறிக்கோழி விலைக் குறியீடு 22% அளவுக்கு உயர்ந்ததையும் அசோசெம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கறிக்கோழியின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வருவதையும் அசோசெம் கூறியுள்ளது.

ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் கறிக்கோழியின் தேவையும், விலையும் வீழ்ச்சி அடைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மாட்டிறைச்சி விவகாரத்தால் அவ்வாறு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் பல நகரங்களில் கறிக்கோழி விலை 15 - 20 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், இது 25% ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-14 ஆண்டுகளில் மாட்டிறைச்சியின் விலை பத்து சதவீதம் வரை அதிகமாகவும், அதற்கு எதிராக பண்ணைக் கோழியின் விலை ஒன்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்த சூழ்நிலையில், ஆந்திரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைத் தொழில் நிச்சயம் லாபம் அடையும் என்றும் அசோசெம் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

நாட்டின் தேவை மற்றும் ஏற்றுமதி / இறக்குமதி மாறும் விகிதத்துக்கு ஏற்பட கோழிப் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த மாநில அரசுகளும் உதவிகளை செய்ய முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.