புது தில்லி: மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
நீட் தேர்வு வினாத்தாள்கள் மொழி வாரியாக வேறுபட்டிருந்ததாகக் கூறி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இன்றைய விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8ம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.
சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், ஒரு லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் நீட் தேர்வை எழுதினர். அதே போல, ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவர்களே மாநில மொழிகளில் தேர்வெழுதினர். எனவே, மாநில உயர் நீதிமன்றங்கள், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.