கவுசம்பி: உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் தர மறுக்கப்பட்டதால், 7 மாத குழந்தையின் உடலை சைக்கிளில் எடுத்துக்கொண்டு செல்லும் கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசம்பியைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக, அலகாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேண்டி மருத்துவமனை நிர்வாகத்தை அனுகியுள்ளார். அப்போது அவரிடம் பணம் கேட்டதால் குழந்தையின் உடலை தோளில் சுமந்தபடி, தனது உறவினர் ஒருவரின் சைக்கிள் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பான புகாரில் மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரில் ஜூன் 5 ஆம் தேதி தனி மனிதர் ஒருவர் தனது மனைவியின் இறந்த உடலை ஒரு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார்.
மே 21 இல், கௌசம்பியில் மருத்துவமனையில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்க மருத்துவமனையின் அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், உயிரிழந்த மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துக்கொண்டு சென்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.
மனசாட்சியில்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இதுபோன்ற அவல சம்பவங்கள் முற்றுபெறுவது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.