ஹைதராபாத்: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, சாதாரணமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்
ஆந்திராவைச் சேர்ந்த ஆஷா என்ற 13 வயது சிறுமியை நாகேஸ்வர ராவ் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். ஆஷாவை அவர் காஷ்மீரில் வைத்து கடந்த 50 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விஷயம் அறிந்த போலீசார் ராவிடம் விசாரணை நடத்தினர் . அப்பொழுது தான் ஆஷாவை திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆஷா மைனர் பெண் என்பதால் அவர் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் இருக்கும் தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் தற்பொழுது ஆஷா மற்றும் அவரது பெற்றோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பெண்கள் கமிஷன் தலைவர் ராஜ குமாரி ஆகிய இருவரும் சந்தித்து நிதியுதவி செய்துள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் அந்த சிறுமியின் குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமானது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தமுடைய சிறுமி ஒரு மைனர் என்பதால், POCSO சட்டத்தின் பிரிவு 23 (2) கீழ், எந்த ஒரு ஊடகமும் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் புகைப்படம், சொந்தப்பெயர், அவர் படிக்கும் பள்ளி உள்ளிட்ட தகவல்களை வெளியிடக்கூடாது.
ஆனால் ஒரு மாநில முதலவரே சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டுள்ள விதமானது கடுமையான சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.