ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க புனித பயணம் மேற்கொள்ளவுள்ள யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக 24 மீட்புக் குழுவும், 35 மோப்ப நாய்களுடன் கூடிய காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் பனி லிங்கம் தோன்றும். அதை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர்.
சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் பனிமலையில் அமைந்திருக்கும் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழி மிகக் கடுமையாக இருக்கும்.
இதுகுறித்து ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் உமாங் நருலா, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிகழாண்டில் அமர்நாத் புனித யாத்திரை வரும் 29-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவர்களில் ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படை, அந்த மாநில மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இவர்கள் தவிர துணை ராணுவத்தினரான சிஆர்பிஎஃப் வீரர்களும் யாத்ரிகர்களுக்கு உதவி புரிவார்கள். மீட்புக் குழுவினரிடம் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கைவசம் இருக்கும்.
பாதுகாப்புக் காரணம் கருதி 35 மோப்ப நாய்களுடன் கூடிய காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று உமாங் நருலா தெரிவித்தார்.