புதுதில்லி: இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையை நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டைநாடுகளில் பயணம் செல்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவினை பொறுத்த வரை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தொகையை பெறுவதிலிருந்து, அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் என்பது அநேகமாக எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவையும் மத்திய அரசு இத்தகைய நடவடிகைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஆதார் அட்டையை நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டைநாடுக்ளில் பயணம் செல்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுவாக இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு ஒருவர் செல்வதானால் பாஸ்போர்ட், விசா எதுவும் தேவையில்லை. சாதாரண வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவை கொண்டே நீங்கள் அந்த இரண்டு நாடுகளுக்கும் சுற்றுலா சென்று வரலாம்.
ஆனால் தற்பொழுது ஆதார் அட்டைக்கு பதிலாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய பாஸ்போர்ட்டை காண்பித்து அங்கு செல்லலாம்.
மேலும், 15 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 65 வயதை கடந்தவர்கள் தங்களது அடையாளம் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றாக வருமான வரித்துறையினரின் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, மத்திய அரசின் சுகாதார திட்ட உறுப்பினருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை காட்டி மேற்கண்ட நாடுகளுக்கு செல்லலாம் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.