அகமதாபாத்: பசுவின் பெயரால் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வியாழன் அன்று குஜராத்துக்கு வருகை தந்தார். தனது பயணத்தின் முதல்கட்டமாக மகாத்மா காந்தியடிகள் உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது:
தற்பொழுது நம் நாட்டில் நடைபெற்று வரும் சில சம்பவங்கள் குறித்து பேசலாமென்றும், வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் வன்முறைக்கு என்றுமே இடம் இல்லை. பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காந்தியே கூட இதனை விரும்பியிருக்க மாட்டார்.
பசுக்களை பாதுகாப்பதனைப் பற்றி காந்தியை விட, வினோபா பாவேவை விட யாரும் பேசி விட முடியாது. அது செய்ய வேண்டிய காரியம்தான். ஆனால் இது காந்தியின் பூமி. அகிம்சையின் தாயகம். அதனை நாம் எப்படி மறந்தோம்?
வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. சட்டத்தினை தனது கையில் எடுத்துக் கொண்டு செயல்பட இங்கு யாருக்கும் உரிமை இல்லை. நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். மகாத்மா காந்தி கனவு கண்ட தேசத்தினை உருவாக்குவோம். நமது சுதநதிர போராட்ட வீர்ரகள் எண்ணி பெருமைப் படத்தக்க ஒரு இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு மோடி பேசினார்.